Tuesday, December 20, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்...உள்ளப்படா

உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
மனத்தினால் இதுதான் என்று உருவகப்படுத்த இயலாத திருவுருவத்தை நினைத்தலும், களங்கமில்லாத மகிழ்ச்சி உண்டாக்கத்தக்க மேலான கருணை அருள் வெள்ளத்தையுடைய பெருமான, எம் இறைவன் அடியேனை தனியாக ஆட் கொண்டார் - அந்த இறைவனிடத்திலேயே போய் ஊதுவாய் அரச வண்டே!

பதவுரை :

உள்ளப்படாத - மனத்தினால் இதுதான் என்று உருவகப்படுத்த இயலாத,

திருவுருவை - திருவுருவத்தை.

உள்ளுதலும் - நினைத்தலும்

கள்ளப்படாத - களங்கமில்லாத

களிவந்த - மகிழ்ச்சி உண்டாக்கத்தக்க

வான்கருணை - மேலான கருணை

வெள்ளப் பிரான் - அருள் வெள்ளத்தையுடைய பெருமான்

எம்பிரான் - எம் இறைவன்

என்னை - அடியேனை

வேறே - தனியாக

ஆட்கொள் - அடிமைகொண்ட

அப்பிரானுக்கு - அந்த இறைவனிடத்திலேயே

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை:

இந்த பாடலின் மூலம் 'இறைவனை நினைத்தாலே போதும். அவன் தன் களங்கமில்லாத அருட் கருணையினால் நம்மை எற்றுக் கொள்வார்' என்று சொல்கிறார்.

Wednesday, November 30, 2005

திருவாசகம்..பூ ஏறு கோனும்...நாயேனைத்

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச
சீயேனும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

தெளிவுரை
நாய் போன்ற பரிதாபத்துக்குரியவனான என்னை தன்னுடைய திருவடிகளைப் பாடும்படி செய்த இறைவனும்,பேய்த்தன்மை யுடையவனான என் மனக்குற்றங்களை மன்னிக்கும் பெருமையுடையவனும்,சிறிதளவும் இல்லாத யான் செய்யும் தொண்டுகளை ஏற்றருள்கின்ற தாயானவனுமாகிய இறைவனிடமே போய் ஊதுவாயாக அரச வண்டே!

பதவுரை
நாயேனை - நாய் போன்ற பரிதாபத்துக்குரியவனான என்னை
தன் அடிகள் -( pope says 'jewelled feet' but i cant make out how it means so. if u know let me know) தன்னுடைய திருவடிகளைப்
பாடுவித்த - பாடும்படி செய்த
நாயகனை - இறைவனும்
பேயேனத் - பேய்த்தன்மை யுடையவனான ( கெட்டவைகள்) என்
உள்ளப் பிழை பொறுக்கும் - மனக்குற்றங்களை மன்னிக்கும்
பெருமையனை - பெருமையுடையவனும்
சீ ஏதும் இல்லாது - சிறிதளவும் இல்லாத
என் செய் பணிகள் கொண்டருளும் - யான் செய்யும் தொண்டுகளை ஏற்றருள்கின்ற
தாயான ஈசற்கே - தாயானவனுமாகிய இறைவனிடமே
சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக
கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை
இறைவன் அடியார்களைத் தன்னைப் பாடும் பணியிலே நிற்கச்செய்து அருள் புரிகின்றான் என்பது ‘நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகன்’ என்பதனால் விளங்குகிறது. தாயானவள் சேயினது குற்றத்தைப் பொறுத்துப் பரிவும் காட்டுவாளாதலின், இறைவனை ‘தாயான ஈசன்’ என்றார். இதனால், பாடும் பணி இறைவனுக்கு மிகவும் உவகையைத் தருவது என்பதை அறியலாம்.

Wednesday, November 23, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்.. நானும்

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

தெளிவுரை:
தானும் தன் தேவியான தையல்நாயகியுடன் நீண்ட சடையையுடைய சிவபெருமான் எம்மை ஆட்கொள்ளவில்லையாயின் நானும் எனது உள்ளமும் தலைவனாகிய அவனுக்கு எவ்வளவு தூரத்தில் இருப்போம். ஆகாயமும் திக்குகளும் பெரிய கடல்களும் ஆகிய பெருமானது தேன் ஊரும் திருவடிகளிடத்தே போய் ஊதுவாய், அரச வண்டே!

பதவுரை:

நானும் - யானும்

என் சிந்தையும் - எனது உள்ளமும்

நாயகனுக்கு - தலைவனாகிய அவனுக்கு

எவ்விடத்தோம் - எந்த இடத்தில் இருப்போம் ( எவ்வளவு தூரத்தில்
இருப்போம் )

தானும் தன் தையலும் - தானும் தன் தேவியான தையல்நாயகி

தாழ்சடையோன் - நீண்ட சடையையுடைய சிவபெருமான்

ஆண்டிலனேல் - ஆட்கொள்ளவில்லையாயின்

வானும் - ஆகாயமும்

திசைகளும் - திக்குகளும்

மாகடலும் - பெரிய கடல்களும்

ஆயபிரான் - ஆகிய பெருமானது

தேன் உந்து - தேனைச் சொரிகின்ற

சேவடிக்கே - திருவடிகளிடத்தே

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை :

இறைவனே தம்மை ஆட்கொள்ளவில்லையென்றால் தாமும் தம் சிந்தையும் எங்கேயோ இருந்திருக்கும் என்று கூறுகிறார். தையலும் என்பது தையல்நாயகி - வைதீஸ்வரன் கோவில் அம்பாளைக் குறிக்கின்றது.

Saturday, November 19, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்.. வைத்தநிதி

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்விஎன்னும
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ
சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:

ஈட்டி வைத்த செல்வம், மனைவியர் ,புதல்வர், குலம், கல்வி ஆகிய இவையே வாழ்க்கையென்று நம்புகின்ற மாயையில் உள்ள இவ்வுலகத்தில், பிறப்பு இறப்பு என்கின்ற மனோவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தை போக்கிய செறிந்த ஞானமுள்ள பரம்பொருளிடம் போய் ஊதுவாய் அரச வண்டே!

பதவுரை:

வைத்த நிதி - ஈட்டி வைத்த செல்வம்

பெண்டிர் - மனைவியர்

மக்கள் - புதல்வர்

குலம் - குலம்

கல்வி - கல்வி

என்னும் - ஆகிய இவையே வாழ்க்கையென்று நம்புகின்ற

பித்த உலகில் - மாயையில் உள்ள இவ்வுலகத்தில்

பிறப்பொடு இறப்பு என்னும் - பிறப்பு இறப்பு என்கின்ற

சித்த விகாரக் கலக்கம் - மனோவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தை (Mentally changing state)

தெளிவித்த - போக்கிய

வித்தகத் தேவற்கே - செறிந்த ஞானமுள்ள (wisdom) பரம்பொருள் (mighty Lord)

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை:

நிலையில்லாத பொருள்களாகிய நிதி முதலியவற்றை நிலையுடையது என்று எண்ணும் அறிவு பேதைமையாதலால், இவ்வுலகை ‘பித்த உலகு’ என்றார்.

இறைவன் இவ்வறியாமையைப் போக்கி அறிவை வழங்குவாராதலால் ‘சித்த விகாரம் தெளிவித்த வித்தகத் தேவர்’ என்றார்.

வித்தகத்தேவர் என்ற வார்த்தைப் ப்ரயோகம் மிக அருமையாக இறைவனின் சிறப்பை விளக்குகிறது!!

தொடரும்..

Wednesday, November 09, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்..கண்ணப்பன்

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருள
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு என்னிடத்தில் இல்லாமை அறிந்தும் என் தந்தையான ஈசன் எதனோடும் ஒப்பில்லாத என்னையும் அடிமையாகக் கொண்டருளி இவ்வண்ண்ம் செய் என்று (நான் செய்ய வேண்டியதைத்) தெரிவித்து என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய மேலாகிய கருணையையுடைய பொடியாக / மின்னுகின்ற அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே போய் ஊதுவாயாக! அரச வண்டே!

பதவுரை :

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு - கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு

இன்மை கண்டபின் - என்னிடத்தில் இல்லாமை அறிந்தும்

என் அப்பன் - என் தந்தையான ஈசன்

என் ஒப்பில் - எதனோடும் ஒப்பில்லாத

என்னையும் ஆட்கொண்டருளி - என்னையும் அடிமையாகக் கொண்டருளி

வண்ணம் பணித்து - இவ்வண்ண்ம் செய் என்று (நான் செய்ய வேண்டியதைத்) தெரிவித்து

என்னை வாவென்ற - என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய

வான் கருணை - மேலாகிய கருணையையுடைய

சுண்ணம் - பொடியாக / மின்னுகின்ற

பொன் நீற்றற்கே - அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக!

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை :

Thanks to wiki books!!

கண்ணப்பர் அன்பு காட்டியது :
தொண்டை நன்னாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் வேடர் குலத்தில் தோன்றியவர் கண்ணப்பர். இவரது இயற்பெயர் திண்ணனார். பருவம் வந்ததும் வேட்டையாடும்பொருட்டுச் சென்றவர் காளத்தி மலை அடிவாரத்தை அடைந்தார்; துணைவன் நாணானால் குடுமித் தேவர் அம்மலைமீதுள்ளார் என உணர்ந்தார்.
முன்னைத் தவப்பயனால் மலைமீதேறிப் பெருமானைக் கண்டார்; அன்பு கொண்டார்; இலிங்கத்தின்மேல் பூவும் பச்சிலையும் இருக்கக் கண்டு, அவற்றை அந்தணர் ஒருவர் சார்த்தி வழிபட்ட முறையை நாணன் கூறக் கேட்டார். பின்பு வாயாகிய கலசத்தில் நீரை முகந்துகொண்டும், பூவும் பச்சிலையும் பறித்துத் தலையில் வைத்துக்கொண்டும், வேட்டையாடிய இறைச்சியாகிய உணவைத் தேடிக் கொண்டுவந்தும், இலிங்கத்தின்மீதிருந்த பூ முதலியவற்றைத் தம் செருப்புக்காலால் நீக்கி, தாம் கொணர்ந்த நீரை உமிழ்ந்து பூவையும் இலையையும் சொரிந்து, ஊனமுதை இட்டு வழிபட்டார்; இங்ஙனம் ஐந்து நாள்கள் வழிபாடாற்றினார். இதைக் கண்டு மனம் பொறாது வருந்திய சிவகோசரியாருக்குத் திண்ணனாரின் அன்பைப் புலப்படுத்த எண்ணிய இறைவன், ஆறாம் நாள் தன் கண்ணில் உதிரம் சொரியச் செய்தான். இதைக் கண்ட திண்ணனார் துடிதுடித்துத் தம் கண்ணையே இடந்து அப்பினார். இறைவனது மற்றொரு கண்ணிலும் உதிரம் வரக் கண்டு தமது மற்றொரு கண்ணையும் அம்பினால் தோண்டும் போது இறைவன், ‘நில்லு கண்ணப்ப’ எனத் தடுத்து நாயனாரின் அன்பை வெளிப்படுத்தினான்.

Friday, November 04, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்..தினைத்தனை

தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும
அனைத்தெலும்பும் உள்நெக ஆனந்தத் தேன்சொரியுங
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
தினையளவாய் இருக்கின்ற மலரிலுள்ள தேனைப் பருகாமல், நினைக்குந்தோறும், காணுந்தொறும், சொல்லுந்தொறும் எக் காலத்தும், எல்லா எலும்புகளும் உள்ளே நெகிழும்படி பேரின்பத் தேனைப் பொழியும் கூத்துடைய பெருமானிடத்திலேயே போய் ஊதுவாயாக அரச வண்டே!

பதவுரை:
தினைத்தனை உள்ளது - தினையளவாய் (Denoting small seed/ also called as italian millet) இருக்கின்ற

ஓர் பூவினில் தேன் உண்ணாது - மலரிலுள்ள தேனைப் பருகாமல்,

நினைத்தொறும் - நினைக்குந்தோறும்

காண்தொறும் - காணுந்தொறும்

பேசுந்தொறும் - சொல்லுந்தொறும்

எப்போதும் - எக் காலத்தும்

அனைத்து எலும்பும் - எல்லா எலும்புகளும்

உள்நெக - உள்ளே நெகிழும்படி

ஆனந்தத் தேன் சொரியும் - பேரின்பத் தேனைப் பொழியும்

குனிப்புடையானுக்கே - கூத்துடைய பெருமானிடத்திலேயே (wiki book says so)

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை: பூவிலுள்ள தேனைத் ‘தினையளவு’ என்றும், இறைவனது கூத்தினை, ‘தேன்மழை’ என்றும் அதனால் வண்டே ! அங்கே சென்று ஊதுவாயாக என்று கூறுவதால் ‘இறையின்பம் அளவற்றது’ என்பதை நமக்கு எடுத்துக் கூறுகிறார்.

'நினைக்குந்தோறும், காணுந்தொறும், சொல்லுந்தொறும் எக் காலத்தும் எல்லா எலும்புகளும் உள்ளே நெகிழும்படி பேரின்பத் தேனைப் பொழியும்' என்று கூறி நமது உள்ளத்தை நெகிழ வைக்கிறார் மாணிக்கவாசகர்.

Friday, October 21, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்..நானார்

2. நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள்:
நான் ஆர் - நான் என்ன தன்மையுடையவன்?
என் உள்ளமார் ஞானங்கள் ஆர் - என் உள்ளத்தில் நிறைந்த ஞான அறிவு (Wisdom's lessons) என்ன?
என்னை யார் அறிவார் - என்னை யார் அறிந்து கொள்வார் ?
மதி மயங்கி - பேரருள் காரணமாக மனமிரங்கி
வானோர் பிரான் - தேவர்களின் பெருமான் (சிவன்)
என்னை ஆண்டிலனேல் - என்னை ஆட்கொள்ளாவிடில்!!!
ஊன் ஆர் உடைதலையில் - மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்பலி தேர் -(உண்பலித்து + ஏர்) உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற, அம்பலவன் - அம்பலவாணனது
தேன் ஆர் கமலமே - தேன் ஊறிய தாமரை போன்ற திருவடியின்கண்ணே
சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக
கோத்தும்பீ - அரச வண்டே!

தெளிவுரை: நான் என்ன தன்மையுடையவன்?, என் உள்ளத்தில் நிறைந்த ஞான அறிவு என்ன? என்னை யார் அறிந்து கொள்வார் ? பேரருள் காரணமாக மனமிரங்கி, தேவர்களின் பெருமான் (சிவன்), என்னை ஆட்கொள்ளாவிடில்!!!மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற அம்பலவாணனது தேன் நிறைந்த தாமரை போன்ற திருவடியின்கண்ணே போய் ஊதுவாயாக!! அரச வண்டே!

விளக்கவுரை: 'இறைவன் ஆட்கொண்டமையால் தான் தம்மை தாமே அறிந்து கொள்ள முடிந்தது' என்றும் 'தான் அதனால் பெற்ற ஞானமும் வெளிப்பட்டது' என்றும் கூறுகிறார் மாணிக்கவாசகர். கடவுள், பேரருள் காரணமாக மனமிரங்கி தன்னை ஆட்கொண்டார். அதன் மூலம் தான் அடைந்த ஞானம் வெளிப்பட்டது என்றும் மாணிக்கவாசகர் கூறுவதால் அவரின் வினயமும் இங்கு வெளிப்படுகிறது. 'மதி மயங்கி வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்' என்று படித்தால் பொருள் சால சிறப்பாக அமையும்!!

தேன் ஆர் கமலமே - தேன் ஊறிய தாமரை போன்ற திருவடியின்கண்ணே என்பதன் மூலம் அவர் திருவடி அவ்வளவு இனிமையாக இருக்கும் என்கிறார். தேனார் கமலமே- பண்பு ஆகுபெயர்.

ஆகுபெயர்:- ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அதனொடு தொடர்புடைய பொருளைக் குறிப்பது ஆகுபெயர் ஆகும். இந்த ஆகுபெயர் 19 வகைப்படும். பெரும்பாலும் வழக்கில் பயன்படுத்தப்படுபவை பொருளாகுபெயர் (thing) , இடவாகுபெயர் (place), பண்பாகுபெயர் (quality) , உவமையாகுபெயர் (comparison) , தானியாகுபெயர் (dont remember!!!)

eg:
தாமரை சேவடி - தாமரை போன்ற மென்மையான சேவடி - lotus like softness - பண்பு ஆகுபெயர்
வெள்ளை அடித்தான் - வெண்மையான சுண்ணம் குறிக்கிறது - white denoting sunnaambu - பொருள் ஆகுபெயர்
பாவை வந்தாள் - சிலைபோன்ற பெண்ணைக் குறிக்கிறது - art like beautiful girl - உவமை ஆகுபெயர்

Thursday, October 13, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்...

திருக்கோத்தும்பி - தில்லையில் அருளிச் செய்தது

கோத்தும்பி என்பது அரச வண்டு என்று பொருள்படும். அரச வண்டை அழைத்து, ‘இறைவன் திருவடிக்கமலத்தில் சென்று ஊதுவாய்’ என்று கூறுவது போலப் பாடப்பட்டுள்ளது இப்பகுதி.

Pope's explanation on Kothumbi: Our poet-sage, like S. Anthony of Padua, and some other medieval saints, had a great sympathy with the irrational creation. This poem is addressed to the humming bee, or winged beetles, which abound in all the topes and glads of South India, and are especially numerous in the shady groves that surround the temples;having a great preference for the fragrant and beautiful trees which are sacred to the Hindu deities. The insect, here called Kottumbi, is probably the dragon-fly Ruplea Spenders. Here the SOUL is really addressed and exhorted to seek Civa's feet.

1.
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைநத
நாயேறு செல்வியும் நாரணனும் நான்மறையும
மாயேறு சோதியும் வானவருந் தாமறியாச
சேயேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரம்மனும், இந்திரனும், அழகு/ஜொலிப்பு கொண்ட கற்றவர்களின் நாவின் மேல் அமர்ந்துள்ள சரஸ்வதியும், நாராயணனும், நான்கு வேதங்களும், சிறப்பு மிகுந்த ஓளி வடிவும் , வானவர்களும் தாம் அறியமுடியாத, ரிஷப (இடப) வாகனத்தில் ஏறும் சிவபெருமானின் திருவடியின்கண் சென்று ஊதுவாய், அரச வண்டே !!

பதவரை:
பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரம்மனும்,
புரந்தரனும் - இந்திரனும்,
பொற்பு அமைந்த - அழகு/ஜொலிப்பு அமைந்த,
நா ஏறு செல்வியும் -கற்றவர்களின் நாவின் மேல் அமர்ந்துள்ள சரஸ்வதியும், நாரணனும் - திருமாலும்,
நான்மறையும் - நான்கு வேதங்களும்,
மா -பெருமை
வேறு சோதியும் - மிகுந்த ஒளி வடிவும்/ wiki books says வடிவினனாகிய உருத்திரனும்,
வானவரும் - தேவர்களும்,
தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத,
சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய திருவடிக் கண்ணே,
சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக
கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை:
தாமரைப்பூவின் மேல் அமர்ந்துள்ள அரசன் போன்றவன் ப்ரம்மா.

நாயேறு செல்வி-அறிவில் சிறந்தவர்கள் தங்கள் சிறப்பை பேசும் வார்த்தைகளில் வெளிப்படுத்துவர். அவ்வார்த்தைகள் நம் நுணி நாக்கு மேல் அன்னத்தைத்(roof of the mouth) தொடும்போதே வரும். அறிவிற்கு அதிபதியான சரஸ்வதி அத்தகைய சிறந்தவர்களின் நுணிநாக்கின் மேல் ஏறி அமருவாள் என்பதைக் குறிக்கும் வண்ணன் உள்ளது என்று நான் கருதுகிறேன்.

மாயேறு சோதி - மிகுந்த ஒளி வடிவும்/ wiki books says வடிவினனாகிய உருத்திரனும் (Rudra is a form thought to be God of Power. May be thats why they refer Jothi/power to Rudra..But I never understood so until I crosschecked my interpretation with their's.

சேவடிக்கு+ஏ என்பதை சேவடியின் கண் என்று மாற்றிக் கொள்க. (4ஆம் வேற்றுமை உருபு 7ஆம் உருபாக மாற்றிக் கொள்க)

( வேற்றுமை உருபு பற்றி படித்தது நினைவுக்கு வருகிறதா !!!அதாவது ஒரு சொல் இயல்பாக இல்லாமல் பொருள்படுவதற்காக மாறுபட்டு ஒரு உருபைச் சேர்த்து வரும் . அதுவே வேற்றுமை உருபு ஆகும்.

ஐ - 2ஆம் வேற்றுமை உறுபு eg: இராமனைக் கண்டேன்
ஆல் - 3ஆம் '' eg: இராமனால் ..
கு - 4ஆம் '' eg: இராமனுக்கு..
இன் - 5ஆம் '' eg: இராமனின்..
அது - 6ஆம் '' eg:இராமனது..
கண் - 7ஆம் '' eg: இராமனின் கண் ..)

MAANIKKAVASAGAR learned english I guess,,, adhaan avar "senrroodhai 'GO'thumbi"nnu paaditaaro..Just kidding :)

Wednesday, October 12, 2005

ஆத்திசூடி - 12


56. தானமது விரும்பு

தானம் கொடுப்பதற்கு விருப்பங்கொள்வாயாக!!!

57. திருமாலுக்கு அடிமை செய்

காத்தற் கடவுளாகிய திருமாலிடம் அன்புடன் சேவை செய்!!

58. தீவினை அகற்று

தீய செயல்களைச் செய்யாதே!!

59. துன்பத்திற்கு இடம் கொடேல்

துன்பம் வரக்கூடிய செயல்களைத் தவிர்ப்பாயாக!!

60. தூக்கி வினை செய்

செய்யும் காரியத்தின் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து அதனைச் செய்வாயாக!!

தொடரும்..

Monday, October 10, 2005

ஆத்திசூடி - 11

51. சேரிடம் அறிந்து சேர்
நீ சேருகின்ற இடத்தின் தன்மையறிந்து சேர்!
52. சையெனத் திரியேல்
பார்ப்பவர்கள் சீ என்று வையுமாறு நடந்து கொள்ளாதே!
53. சொற் சோர்வு படேல்
நீ பேசுகின்ற பேச்சு எடுபடாதவாறு தொய்வுடன் பேசாதே!
54. சோம்பித் திரியேல்
(again, I hear this at my home often from people, aiming at me)
எத்தகைய வேலையும் செய்யாமல் சோம்பலுடன் திரியாதே!

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி
உன் ஒழுக்கத்தைப் பார்ப்பவர்கள் ' இவன்/ள் நல்லவன்/ள்' என்று சொல்லுமாறு நட!
விரைவில் திருவாசகத்தின் அடுத்த பாடல்....

Sunday, October 09, 2005

ஆத்திசூடி - 10

46. சித்திரம் பேசேல்
வீணான மொழிகளைப் பேசாதே!

47. சீர்மை மறவேல்
சிறப்புக்குக் காரண்மான செயல்களைச் செய்வதற்கு மறவாதே!

48. சுளிக்கச் சொல்லேல்
கேட்பவர்கள் வெறுப்படையும்படியான/க மொழிகளைப் பேசாதே!

49. சூது விரும்பேல்
சூதாடுதலிலே விருப்பங் கொள்ளாதே!

50. செய்வன திருந்தச் செய்
(I hear this from my mom always - Dhenam Thittu vanguven!!)
நீ செய்கிற காரியங்களை செப்பமுறச் செய்வாயாக!!
தொடரும்..

Saturday, October 08, 2005

ஆத்திசூடி - 9

41. கொள்ளை விரும்பேல்
பிறருடைய பொருளுக்கு ஆசைபடாதே!
42. கோதாட்டு ஒழி
குற்ற்ம் பொருந்திய விளையாட்டை விட்டுவிடு!
43. கெளவை அகற்று
மற்ற்வர்களைப் பற்றீ கேவலமாகப் பேசாதே!

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்
அரசனுடைய ஆட்சி முறைப்படி நட!!
45. சான்றோர் இனத்து இரு
அறிவில் சிற்ந்த பெரியோர்களின கூட்டத்தில் இரு!!

Tuesday, October 04, 2005

ஆத்திசூடி - 8

36. குணமது கைவிடேல்
நல்ல குண்ங்ளை விட்டுவிடாதே!
37. கூடிப் பிரியேல்
நல்லவர்களோடு நட்பு கொண்டு பிறகு பிரியாதே!
38. கெடுப்பது ஒழி
பிறரைக் கெடுக்கும்படியான செயல்க்ளை விட்டு விடு!
39. கேள்வி முயல்
நல்லவர்க்ளின் உரைகளை கேட்க முயற்சி செய்!
40. கைவினை கரவேல்
நீ செய்யும் காரியங்களை பிறர் அறியாமல் மறைக்காதே!
தொடரும்

Saturday, October 01, 2005

ஆத்திசூடி- 7

31 . அனந்தல் ஆடேல்
மிகுதியாகத் தூங்காதே
ககர வருக்கம்
32. கடிவது மற
பிறரோடு கோபமாகப் பேசியதை மற்ந்துவிடு
33. காப்பது விரதம்
உயிர்களைக் காப்பதைக் க்டமையாக எண்ணு
34. கிழமைப்பட வாழ்
உன் பொருள்கள் பிறருக்கு உபயோகப்படுமாறு வாழ்.
35. கீழ்மை அகற்று
இழிவு தரும் குணங்களை நீக்கு
தொடரும்..

Thursday, September 29, 2005

திருவாசகம்- புற்றில் வாள்

6.கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: எங்கும் கோணாது நேரே செல்லும் அம்பு கண்டு அஞ்ச மாட்டேன். எமனது கோபத்துக்கு அஞ்ச மாட்டேன். நீண்ட பிறையாகிய அணிகலனையுடைய சிவபெருமானை எண்ணி, கசிந்து, உருகி, ஒளி பொருந்திய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருக துதித்து நின்று, புகழ மாட்டாத ஆண்மையுடையரல்லாரைக் காணின், கடவுளே, நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.


பதவுரை:
கோண் இலா - (Pope separates like this) எங்கும் கோணாது நேரே செல்லும்

கோள் நிலா - (Wiki group separates like this) கொலைத் தன்மை தங்கிய

வாளி - அம்புக்கு

அஞ்சேன் - அஞ்ச மாட்டேன்

கூற்றுவன் - எமனது சீற்றம்

நீள்நிலா - நீண்ட பிறையாகிய

அணியினானை - அணிகலத்தையுடைய சிவபெருமானை

நினைந்து - எண்ணி

நைந்து உருகி - கசிந்து உருகி

நெக்கு - நெகிழ்ந்து

வாள் நிலாம் - ஒளி பொருந்திய

கண்கள் - விழிகளில்

சோர - ஆனந்தக் கண்ணீர் பெருக

வாழ்த்தி நின்று - துதித்து நின்று

ஏத்த மாட்டா - புகழ மாட்டாத

ஆண் அலாதவரைக் கண்டால் - ஆண்மையுடையரல்லாரைக் காணின்

அம்ம - ஐயோ/ கடவுளே!!

நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

Note: 'aaru' meaning 'alavillaadhadhu' .. thats why we call 'river' as 'aaru'


விளக்கவுரை:
இறைவனது திருவடிவத்தை நினைந்து பேரின்பத்தில் திளைத்திராதவரைக் காணின் அஞ்ச வேண்டும் என்றார்.

இப்பாடலிலேயே (புற்றில் வாள்..) 'நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா' என்ற வரிகள் என்னை மிகவும் பிடித்த (பாதித்த) ஒன்று. காரணம், இளையராஜா அவர்கள், இங்கு எவரையும் மயக்கும் இசை ஓன்றை இவ்வரிகளுக்கு அளித்துள்ளார்.


'வாணிலாங் கண்கள் சோர' - இவ்வரிகளின் ஆலாபனை, அதன் பொருளுக்கு எற்ப, கண்களில் நீர் கொண்டு வரும் சக்தி கொண்டுள்ளது.
மேலும் 'நினைந்து நைந்துருகி நெக்கு' இவ்வரியை கவனியுங்கள்.. அது 'நினைந்து நினைந்து உருகி நெக்கு ' அல்ல. அப்படி இருந்திருந்தால் அது வெறும் அடுக்குத்தொடராக மட்டுமே இருந்திருக்கும் (ஈர்கும் சக்தியைப் பெறாது).
ஆனால் மாணிக்கவாசகரோ 'நினைந்து, நைந்து (கசிந்து), உருகி, நெக்கு (நெகிழ்ந்து)' என்று கூறுகிறார். மனதை உருக்க என்ன பொருத்தமான வார்த்தைப் ப்ரயோகம்!! இதை இசையோடு கேட்கும் போது நம்மை நிச்சயம் உருக்கும் சக்தியைப் பெருகிறது.

திருச்சிற்றம்பலம்!!

(Dedicated to Lord Shiva - The MAN of Revered hall of consciousness Chidambaram. In Chidambaram, a dance contest between Kali and Nataraja was held. Nataraja performed Urthuvathandavam and won. )

முற்றும்.

Tuesday, September 27, 2005

திருவாசகம் - புற்றில் வாள்..

5.தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: கட்டுத்தறியில் உள்ள ஆண் யானையைக் கண்டு அஞ்ச மாட்டேன். நெருப்பைப் போன்ற கண்களையுடைய புலியைக் கண்டு அஞ்ச மாட்டேன்.மணம் வீசுகின்ற சடையையுடையவனான என் அப்பன், தேவர்களாலும் அடைய முடியாத நெருங்கிய/செறிவு தரும் கழல்கள் அணிந்த திருவடிகளை சிறப்போடு இன்பமாக இருக்காத அறிவிலிகளைக் காணின், ஐயோ, நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

பதவுரை :
தறிசெறி - கட்டுத்தறியிலே பொருந்தியிருக்கும்
களிறும் அஞ்சேன் - ஆண் யானைக்கும் அஞ்ச மாட்டேன்
தழல் விழி - நெருப்புப் போன்ற கண்களையுடைய
உழவை அஞ்சேன் - புலிக்கும் அஞ்சமாட்டேன்
வெறி கமழ் - மணம் வீசுகின்ற
சடையன் - சடையையுடையவனும்
அப்பன் - தந்தையுமாகிய இறைவனது
விண்ணவர் நண்ணமாட்டா - தேவர்களாலும் அடைய முடியாத
செறிதரு - நெருங்கியகழல்கள்
ஏத்தி - கழலணிந்த திருவடிகளைத் துதித்து
சிறந்து - சிறப்புற்று
இனிது இருக்க மாட்டா - இன்பமாக இருக்க மாட்டாத
அறிவிலாதவரைக் கண்டால் - அறிவிலிகளைக் காணின்
அம்ம - ஐயோ
நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கவுரை:

அம்பலத்தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கி இன்புறும் தன்மை இல்லாதவ்ர்கள் அறிவிலிகளே என்று மாணிக்கவாசகர் நொந்து கொள்கின்றார். இறைவனது திருவடியை வணங்கி இருத்தல் எவ்வளவு இன்பம் தரக்கூடியது என்பதையும் மிக அழகாகச் சொல்லுகின்றார்.

Saturday, September 24, 2005

திருவாசகம் - புற்றில் வாள்..

3. கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ள நெக்கில்
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: கிளி போல் பேசும் பெண்களின் மொழி கண்டு அஞ்ச மாட்டேன். அவர்களுடைய வஞ்சகமான (Pope calls it wanton smile) புன்சிரிப்பு கண்டு அஞ்ச மாட்டேன். வெண்மையான திருநீர் அணிந்த மேனியையுடைய அந்தணனின் பாதத்தை அடைந்து கண்களில் நீர் ததும்பி வண்ங்கி உள்ளம் நெகிழும் கனிவு இல்லாதவரைக் கண்டால் ஐயோ/கடவுளே, நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

பதவுரை :
கிளி அனார் - கிளியை ஒத்த பெண்கள்
கிளவி அஞ்சேன் - சொற்களுக்கு அஞ்ச மாட்டேன்
அவர் - அவரது
கிறி முறுவல் அஞ்சேன் - வஞ்சனையுடைய புன்சிரிப்புக்கும் அஞ்ச மாட்டேன்
வெளிய நீறு ஆடும் - வெண்மையான திருநீற்றில் மூழ்கிய
மேனி - மேனியையுடைய
வேதியன் பாதம் நண்ணி - அந்தணனது திருவடியை அடைந்து
துளி உலாம் கண்ணர் ஆகி - நீர்த்துளிகள் சிந்துகின்ற கண்களையுடையவராய்
தொழுது அழுது - வணங்கி அழுது
உள்ளம் நெக்கில் - உள்ளம் நெகிழ்ந்து
அளி இலாதவரைக் கண்டால் - கனிவு இல்லாதவரைக் காணின்
அம்ம - ஐயோ / கடவுளே
நாம் அஞ்சும் ஆறு - நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்

விளக்கவுரை: கிளி போல் பேசும் பெண்களின் மொழி கண்டு அஞ்ச மாட்டேன். அவர்களுடைய வஞ்சகமான புன்சிரிப்பு கண்டு அஞ்ச மாட்டேன்.பெருமானது அருட் கோலத்தைக் கண்டு உருகாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்கின்றார். துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ள நெக்கில்- இந்த வார்த்தைகளை பாட்டில் கேட்கும்போது கண்களில் நீர் சொரிய மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் நிற்பதாக உருவகப்படுத்திப் நாம் பார்க்கலாம்.


4.பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: எல்லா நோய்கள் வந்தாலும் அஞ்ச மாட்டேன். பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்ச மாட்டேன். பிறை நிலாவை அணிந்துள்ள சிவபெருமானின் தொண்டர்களோடு சேர்ந்து அந்த திருமால் வலிமையான நிலத்தைப் பிளந்து சென்றும் காண முடியாத சிவனின் திருவடியைத் துதித்து திருநீரு அணியாதவரைப் பார்த்தால், கடவுளே, நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்

பதவுரை:
பிணி எலாம் - எல்லா வகையான நோய்களும்
வரினும் - வந்தாலும்
அஞ்சேன் - அஞ்ச மாட்டேன்
பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் - பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்ச மாட்டேன்
துணிநிலா அணியினான்றன் - பிறையை அணிகலனாகவுடைய சிவபெருமானது
தொழும்பரோடு அழுந்தி - தொண்டரோடு பொருந்தி
அம்மால் - அத்திருமால்
திணி நலம் பிளந்தும் காணா - வலிமையான நிலத்தை அகழ்ந்தும் காணமாட்டாத
சேவடி பரவி - சிவந்த திருவடியைத் துதித்து
வெண்ணீறு அணிகிலாதவரை - திரு வெண்ணீறு
அணியாதவரைகண்டால் - காணின்
அம்ம - ஐயோ
நாம் அஞ்சும் ஆறு - நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்

விளக்கவுரை:இந்த பாடலில் மாணிக்கவாசகரின் சைவப் பற்று நன்கு வெளிப்படுகிறது. மேலும் இங்கு திருமால் சிவனின் அடியை அறிய விரும்பி வராக அவதாரம் எடுத்து நிலத்தைப் பிளந்து சென்றும் காண முடியாத கதையை இங்கு சொல்கிறார். (Lord Shiva later blessed Lord Brahma and Lord Vishnu in the form of Lingodbhavar.)

தொடரும்..

Friday, September 23, 2005

திருவாசகம் - புற்றில் வாள்

புற்றில் வாள்..

இது ' அச்சப்பத்து' என்ற பகுதியில் வருகிறது - சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் பாடியது. இறைவனது திருவருள் நெறிக்குப் புறம்பானவற்றைக் கண்டு அஞ்சிப் பாடியது ஆதலால், அச்சப் பத்து எனப்பட்டது. 'தீயவை தீய பயத்தலால' அச்சம் உண்டாயிற்று என்றார்.

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சு மாறே.


பொருள்:புற்றில் வளைந்து இருக்கும் பாப்பைக் கண்டு அஞ்ச மாட்டேன். பொய் பேசுபவர்களின் உண்மை போன்ற சொற்களைக் கண்டு அஞ்ச மாடேன்.அடர்த்தியான நீண்ட சடையையுடைய பெருமைக்குரிய நெற்றிக்கண்ணைக் கொண்ட எம்பெருமானின் பாதத்தை அடைந்து, வேறொரு தெய்வம் இருப்பதாக எண்ணி எம்பெருமானை போற்றாதவரைப் பார்த்தால், கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

பதவுரை :
வாள் அரவு - வளைந்து உள்ள கொடிய பாம்பு
அஞ்சேன் - அஞ்சமாட்டேன்
பொய்யர்தம் மெய்யும் - பொய்யர்களது உண்மை போன்ற சொற்களுக்கும்
கற்றை வார்சடை - அடர்த்தியான நீண்ட சடை
எம் அண்ணல் - எம் பெரியோனாகிய
கண்ணுதல் - நெற்றிக்கண்ணையுடைய இறைவனது
பாதம் நண்ணி - திருவடியை அடைந்தும்
மற்றும் ஓர் தெய்வம் தன்னை - வேறொரு தெய்வததை
உண்டு என நினைந்து - இருப்பதாக எண்ணி
எம் பெம்மான் கற்றிலாதவரை - எம்பெருமானைப் போற்றாதவரை
அம்ம - ஐயோ/கடவுளே! (exclamation!!)
நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்கின்ற வகை சொல்ல முடியாத அளவு ஆகும்

விளக்கவுரை:

எம் பெருமானைப் போற்றாதவரை 'கற்றிலாதவர்' என்று சொல்கிறார். பாம்பையே அணியாகப் பூண்டு, ஞானத்தையே கண்ணாகக் கொண்டு உள்ள இறைவன் அடியார், புற்றில்வாழ் அரவத்தையும் பொய்யர்தம் மெய்யையும் கண்டு அஞ்ச வேண்டுவதில்லை.ஆனால், இறைவனது திருவடியை அடைந்தும் பிற தெய்வங்களை வழிபடுவாரைக் கண்டு அஞ்ச வேண்டும் என்கின்றார்.

'எம் பெம்மாற்கு அற்றிலாதவரை' எனப் பிரித்து, எம் இறைவன்பொருட்டுப் பிற பற்றுகள் நீங்காதவரை என்றும் பொருள் கூறலாம்.

இளையராஜாவின் இசையில் 'கற்றிலாதவரை' என்ற இடத்தில் உள்ள அழுத்தம் (stress) மிக அருமையாக இருக்கும். அம்ம - கடவுளே என்று மன்ம் நொந்து கொள்கிறார்.

இதன் மூலம் மாணிக்கவாசகர் தன் ஆழ்ந்த அன்பைத் தெரிவிப்பதோடு மட்டும் இல்லாமல் அவர் ஒரு relgious fanatic/ rebel இல்லை என்பதையும் காட்டுகிறார். ஏன் என்று கேட்கிறீர்களா?? அவர் அவருடைய இளமைக்காலத்தில் (நல்ல சக்தி உள்ள சமயம்) இதைப் பாடும்போதும் 'இறைவனது திருவடியை அடைந்தும் பிற தெய்வங்களை வழிபடுவாரைக் கண்டு அஞ்ச வேண்டும்' என்று தாழ்மையுடன் கூறுகின்றாரே ஒழிய அவர்களை மாற்ற / அடிக்க வேண்டும் என்று கூறவில்லை..

2.
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: வன்மையான மாமிசம் கொண்ட வேல் கண்டு அஞ்ச மாடேன்; வளையலை அணிந்த பெண்களுடைய கடைக்கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன்; எலும்புகளெல்லாம் உருகும்படியாகப் பார்த்து, பொன்னம்பலத்தில் ஆடுகின்ற, எனது துளையிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து, அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பற்றவரைக் காணின், கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

பதவுரை:
வன்புலால் - வலிமையான மாமிசம்
வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் -வளையலை அணிந்த பெண்களுடைய கடைக்கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன்
என்பு எலாம் உருக நோக்கி - எலும்புகளெல்லாம் உருகும்படியாகப் பார்த்து
அம்பலத்து ஆடுகின்ற - பொன்னம்பலத்தில்(சிதம்பரத்தில்) ஆடுகின்ற
என் பொலாமணியை ஏத்தி - எனது துளையிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து
அருள் இனிது பருகமாட்டா - அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பு இலாதவரைக் கண்டால் - அன்பற்றவரைக் காணின்
அம்ம - ஐயோ/கடவுளே (exclamation)
நாம் அஞ்சும் ஆறு - கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

விளக்கவுரை:
'எமனைக் கடிந்து காமனை எரித்த சிவபெருமானது அடியார்க்குக் கொடிய வேலும் மாதரது கூரிய பார்வையும் துன்பம் தரமாட்டா' என்பார். அதையே 'வன்புலால் வேலும் அஞ்சேன், வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்' என்றார்.

'ஆனால், அம்பலத்தாடும் பெருமானது இனிமையான பார்வையையும் அழகிய நடனத்தையும் கண்டு அன்புறாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும்' என்பார் . அதையே 'அம்பலத்தாடுகின்ற என் பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.

தொடரும்..

Thanks to wiki group and project madurai for having G.U Pope's english tranliteration online !

Thursday, September 22, 2005

ஆத்திசூடி- 6

26. இலவம் பஞ்சில் துயில்
(துயில் - தூங்கு)
இலவம் பஞ்சிலானான மெத்தையில் படுத்து உறங்குவாயாக!
27. வஞ்சகம் பேசேல்
மனத்திலே வஞ்சம் வைத்துக் கொண்டு பிறரிடம் பேசாதே!
28. அழகு அலாதன செய்யேல்
நன்மையில்லாத காரியங்களைச் செய்யாதே!
29. இளமையில் கல்
இளம்பருத்திலேயே கல்வியைக் கற்றுக் கொள்!!
30. அறனை மறவேல்
தருமம் செய்தலை எப்பொழுதும் மறக்காமல் செய்வாயாக!!
தொடரும்..
விரைவில் திருவாசகம் (symphony verses)

Tuesday, September 20, 2005

ஆத்திசூடி- 5

21. நன்றி மறவேல்
ஒருவர் செய்த நன்றியை என்றும் மறவாதே!

22. பருவத்தே பயிர் செய்
(பருவம் - காலம் பயிர் - வளர்)
எத்தொழிலையும்/எக்கலையையும் செய்ய வேண்டிய காலத்தில் (வளர) செய்வாயாக!

23. மன்று பறித்து உண்ணேல்
(மன்று பறித்து - கைக்கூலி வாங்குதல் (I am not sure but I guess so))
நியாய சபைகளில் நியாயம் கூறுவோனாக இருந்து கைக்கூலி வாங்கி வாழ்க்கை நடத்தாதே!

24. இயல்பு அலாதன செய்யேல்

இயற்கைக்கு மாறுபட்ட காரியத்தைச் செய்யாதே!

25. அரவம் ஆட்டேல்
(அரவம் - பாம்பு)

பாம்பைப் பிடித்து விளையாடதே !
தொடரும்..
(விரைவில் (symphony verses alone) திருவாசகம்.. )

Monday, September 19, 2005

ஆத்திசூடி- 4

16. சனி நீராடு
(சனி- குளிர்ந்த)

குளிர்ந்த தண்ணீரில் குளி!!
(Many people interpret this wrongly as ' take bath on saturdays' which is not what avvai meant(though saturdays are good for oilbath). My thatha while teaching us was annoyed with some interpreters and specifically used to tell us this.)

17 . ஞயம்பட உரை
(ஞயம்பட- இனிமையாக ; உரை - பேசு)

இனிமையான மொழிளையே பேசு!!

18. இடம்பட வீடு எடேல்
(இடம்பட - நிறைய இடம் அடையுமாறு ; எடேல் -எடுக்காதே)

இடம் வீணாகக் கிடக்குமாறு பெரிய வீடு கட்டாதே!!
19. இணக்கமறிந்து இணங்கு
(இணக்கம் அறிந்து - யாருடன் பழகுகிறோம் என்று அறிந்து ; இணங்கு-பழகு)

ஒருவரோடு நட்பு கொள்வதற்கு முன் அவருடைய குணநலன்களை தெரிந்துகொண்டு நட்பு கொள்!!

20. தந்தை தாய் பேண்
(பேண்- காப்பாற்று)

தந்தை தாயைக் காப்பாற்றுவாயாக!!
தொடரும்..

Sunday, September 18, 2005

ஆத்திசூடி- 3

11. ஓதுவது ஒழியேல்
ஓதுவது- கற்பது ஒழியேல்- நிறுத்தாதே

நூல்களைக் கற்பதை நிறுத்தி விடாதே

12.ஓளவியம் பேசேல்
ஓளவியம்-பொறாமை மொழி

பொறாமை மொழிகளைப் பேசுதலை ஒழிப்பாயாக!!

13. அஃகஞ் சுருக்கேல்
அஃகு - தானியம் சுருக்கேல்- சுருக்காதே

நெல் முதலிய தானியங்களைக் குறைவாக விற்காதே!!

14. கண்டொன்று சொல்லேல்
கண்டொன்று- பார்க்காததை

பார்க்காதவற்றைப் பார்த்ததாகப் பேசாதே

15. ஙப்போல் வளை
ஙப்போல்- ங எழுத்து போல்

ஙகரம் போல் உற்றார் உறவினர்களுக்கு வளைந்து கொடு
தொடரும்..

Saturday, September 17, 2005

ஆத்திசூடி- 2

6. ஊக்கமது கைவிடேல்
(ஊக்கமது - உள்ளக் கிளச்சியை; கைவிடேல் - தளர்ந்து போக விடாதே)

ஒரு காரியத்தை செய்தக்கண் உண்டாகிய உள்ளக் கிளச்சியை தளர்ந்து போக விடாதே!!

7. எண்ணெழுத் திகழேல்
(எண் - கணிதம்; எழுத்து- இலக்கண நூல்; இகழேல் - இகழ்ந்து ஓதுக்கி விடாதே)

கணித நூல் ,இலக்கண நூல் முதலியவைகளை இகழ்ந்து ஓதுக்கி விடாமல் கற்க வேண்டும்.
8.ஏற்பது இகழ்ச்சி
(ஏற்பது - பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி - இழிவு தரும்)

பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.

9. ஐயமிட்டு உண்
(ஐயமிட்டு - கேட்பவற்கு கொடுத்து)

கேட்பவற்கு கொடுத்து உண்ண வேண்டும்

10. ஒப்புர வொழுகு
(ஒப்புர - உலக போக்கிற்கு எற்றவாறு; ஒழுகு - நட)

உலக போக்கிற்கு எற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
தொடரும்..

Friday, September 16, 2005

ஆத்திசூடி- 1

மக்கள் ஓழுக்கமாக வாழவேண்டும். ஓழுக்கம் உயிரினும் மேலாக போற்றுதற்குரியது என்று கொண்டவர்கள் தமிழ் மக்கள். ஓழுக்க நெறிகளை முறைப்படுத்தவே சான்றோர்கள் நீதி நூல்களை எளிமையான தமிழில் நுட்பமான கருத்துச் செறிவுடன் அமைத்துள்ளனர்.

அவ்வகையில் ஆத்திசூடி ஒளவை எழுதிய எளிமையான நீதி நூல். அதில் சிலவற்றை பின் வரும் பகுதியில் காண்போம்..

ஆத்திசூடி
கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே!!

ஆத்தி சூடி - திருவாத்தி மலர்மாலையை அணிந்த
யமர்ந்த - சிவபெருமானால் விரும்பப்பட்ட ( மேல் அமர்ந்த )
தேவனை- ஆனைமுகக் கடவுளை
ஏத்தி ஏத்தி - பலகாலும் (மேலும் மேலும்)
தொழுவோம் யாமே - நாம் வணக்கம் செய்வோம்
பொருள்: திருவாத்தி மலர்மாலையை அணிந்த சிவபெருமானால் விரும்பப்பட்ட ஆனைமுகக் கடவுளை நாம் பலகாலும் வணக்கம் செய்வோம்!!

1. அறஞ்செய விரும்பு
(அறம் - தருமம்)

தருமம் செய்ய நீ விரும்புவாயாக!!

2. ஆறுவது சினம்
(சினம் -கோபம்; ஆறுவது- தணிவது)

கோபம் தணிந்து விடக்கூடிய தன்மையுடையது!!

3. இயல்வது கரவேல்
(இயல்வது- இயன்ற ; கரவேல்-தருமத்தை செய்யாமல் இரூத்தல் கூடாது)

செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது!!

4. ஈவது விலக்கேல்
(ஈவது- கொடுப்பதை; விலக்கேல்-தடுக்காதே)
ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே !!
5. உடையது விளம்பேல்
(உடையது- உன்னிடம் உள்ளதை; விளம்பேல்- கூறாதே)

உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி கூறாதே ( பெருமையாக பேசாதே) !!

(தொடரும்)

தினம் ஒரு கல்வி !!

வெகு நாட்களாகவே வலைப்பதிவில் தமிழில் என் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இன்று அது நிறைவேறியது!!

அதன் காரணத்தைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அதிகாலையில் அதிசயமாக எழுந்த நான் ஓளவையின் ஆத்திசூடியை நினைவுகூர ஆசைப்பட்டேன். எனக்கு பாதிக்கு மேல் மறந்துபோய்விட்டது என்று இன்று தான் தெரிய வந்தது. என்னைப் போல் எத்தனை பேர் மனம் வருந்துவார்கள் என எண்ணினேன். மேலும், என் தமிழ் ஆர்வமுள்ள சில நண்பர்கள் தமிழ் நூல்களை படிக்க வாய்ப்பு இல்லை என்று கூறியது என் சிந்தையை எட்டியது.

'ஏன் நாம் தமிழில் இன்று முதல் தமிழில் தினமும் சில எளிமையான சான்றோரின் வாக்குகளைகளையும் அதன் பொருளையும் இங்கு சொல்லக்கூடாது' என்ற எண்ணம் உதித்தது. இதன் மூலம் நானும் படிப்பேன். மற்றவர்களும் பயன் அடைவார்கள் என நம்புகிறேன்.

உங்கள் ஆர்வம் - என் உற்சாகம் !!

விரைவில் சந்திப்போம்!!!