Saturday, January 12, 2008

பாரதி சின்னப்பயல்,பொருளிலக்கணம் மற்றும் அமெரிக்காவில் நாடகம்

என் இனிய தமிழ் மக்களே,

என்ன.. புதுக்கவிதை, மரபுக்கவிதை பற்றி எல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்டதுல மலைச்சு போயிட்டீங்களா? புதுக்கவிதைன்னா பாரதியார் தான் நினைவுக்கு வராரு. பாரதியார் எவ்வளோ புத்திசாலி தெரியுமா?

சும்மா கதை கேளுங்க!!

ஒரு சமயம் பாரதியாரோட நண்பர் காந்திமதிநாதன், பாரதியாருக்கு கிடைக்கும் புகழ், பாரட்டைப் பார்த்து கொஞ்சம் அசிகைப்பட்டார். அதனால, அவரிடம் போய் 'பாரதி சின்னப்பயல்'ன்னு ஈற்றடியாக வைத்து ஒரு பாட்டு சொல்லுன்னு கேட்டார். உடனே பாரதியார் ஒரு பாட்டைப் பாடி, கடைசியில் 'காந்திமதிநாதனைப் பார்-அதி சின்னப்பயல்'ன்னு முடிச்சு அவர் மூக்கை உடைச்சாராம். என்ன கூர்மையான புத்தி பாருங்க..நம்ம மக்கள் சிலரும் அது போல கூர்மையா யொசிக்கிறவங்க தான்!! எங்க குடும்பத்தோழர் ஒருத்தர் எங்க கிட்ட வந்து 'திருப்பாவை எல்லாம் ஏன் படிக்கறீங்க? அது அத்தனையும் தப்பாம். ஆண்டாளே சொல்லிட்டாங்க' னார்.. தூக்கி வாரி போட்டு எங்க பாட்டியும் 'அது எங்க சொன்னாள்ன்னு' கேக்க கடைசி பாட்ட காட்டராரு..

"வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்."

திருப்பாவையை தவறாம சொல்லுன்னு சொல்றாங்க..இவர என்னங்க சொல்றது :)-

அது கிடக்கட்டும் மக்களே.. மறுமொழியிட்ட மக்கள் மற்றும் அவர்கள் கொடுத்த வலைத்தளங்களுக்குப் போய் நிறைய படிக்கணும், தமிழ் எழுத்தாளர்கள தெரிஞ்சுக்கணும், அவர்கள் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல ரொம்ப ஆசை தான். ஆனா, எதிர்பாரதவிதமாக, எனக்கு கல்லூரியில இந்த வாரம் வேலை ரொம்ப அதிகம். காலையில தான் வீட்டுக்கே வர முடிஞ்சது..இதுக்கு நடுவுல பதிவுகள் வேற எழுத வேண்டியிருக்கு..அதுனால பதில் மறுமொழி கூட இடமுடியல. இன்னும் ரெண்டு, மூணு நாளுல எல்லாருக்கும் பதில் போடறேன். கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்க!!

இலக்கணம் ஒரு கண்ணோட்டம் - 6

சொல்லிலக்கணத்தில கொஞ்சம் மீதம் இருக்கே!!

23. இலக்கியப்படி சொல்ல 4 வகையா பிரிக்கலாம்.

1. இயற்சொல் : எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த தமிழ் சொற்களை இயற்சொல் என்று கூறுவர். சா: மண், நடந்தான்
2. திரிசொல்: கற்றவர்களுக்கு மட்டுமே பொருள் விளங்கும் சொற்களை திரிசொல் என்பர் சா:கிள்ளை (கிளி); வேழம் (யானை)
3. திசைச்சொல்:தமிழ்நாட்டிற்கு அப்பால் பல திசைகளிலிருந்து வந்து தமிழுடன் கலந்த சொற்களை திசைச்சொல் எனபர் சா: செப்பு, சாவி, பண்டிகை, கஜானா
4. வடசொல்: சமிஸ்கிருத மொழியில் இருந்து தமிழில் வந்து கலந்த சொற்கள் வடசொல் எனப்படும். சா: ஜலம், நமஸ்காரம்.
அவ்ளோ தான் 'சொல் இலக்கணம்'. பொருளிலக்கணத்திற்கு போவோமா!!

இது சொற்கள் சேரும் விதம், வாக்கியம் அமைப்பதின் விதி, அமைப்பு போன்றவற்றைப் பற்றிச் சொல்வது. இந்த 'junoon' தமிழ் ஏன் நமக்கு வித்தியாசமா படுது?!! இந்த பகுதியில விதித்த விதிகளால தான்!!

இதுல உள்ள எல்லா விதிகளையும் பற்றி பேசுவது கடினம் தான். நல்லா தெரிஞ்சுக்க இங்க பாருங்க (பக்கம் 176 முதல்). நம்ம சிலவற்றை மட்டும் பார்ப்போம்!!

24.தொகைன்னா என்னன்னு பார்போம்!!

இரண்டு சொற்களுக்கிடையே வரவேண்டிய உருபு மறைந்து வந்தும் அந்த பொருளைத் தந்தால் அதுக்கு பேரு தொகை. அப்படி வந்த 'தொடரான சொற்களுக்குப்' பேர் தொகை நிலைத் தொடர்.

சா: பாடல் பாடினான் (பாடல் என்பது பாடலைக் குறிக்குது)

இத 5 வகையா பிரிக்கலாம்.
1. வேற்றுமைத் தொகை (ஐ, ஆல், கு, இன், அது, கண்) சா: பாடல் பாடினான்
2. வினைத்தொகை சா: பாய்புலி (பாய்கினற/ பாயும்/பாய்ந்த் புலி)
3. பண்புத்தொகை சா: செம்மண் (செம்மையான மண்)
4. உவமைத்தொகை சா: பவள வாய் (பவளம் போனற வாய்)
5. உம்மைத்தொகை சா: ஐந்தரை கிலோ (ஐந்தும் அரையும்- உம் மறைந்து வருகிறது)
6. அன்மொழித்தொகை: மேலுள்ள 5 தொகைகளுடன் இடைச்சொல் அல்லாத சில சொற்கள் மறைந்து வந்தால் அது அன்மொழித் தொகை சா: மலர்விழி வந்தாள். மலர்விழி - 'மலர்போன்ற விழி' ய பார்த்தா அது பண்புத்தொகை. பின்னாடி வர 'வந்தாள்' என்ற வினைமுற்றால் அது ஒரு பெண்ணைக் குறிக்கும். இது அன்மொழித் தொகை.

25. தொகாநிலைத்தொடர்ன்னு ஒண்ணு இருக்கு.

இந்த இடைச்சொற்கள் தொகாம முழுசா வந்தா தொகா நிலைத்தொடர். சா: பாண்டியன் வந்தான்.

26. வழு- அப்படீன்னா என்ன?
இலக்கணத்தில் குற்றமுடையதாக வரும் சொல் வழு சா: கண்ணகி வந்தான்

27. வழுவமைதின்னா என்ன?

அப்படி இருக்கும் வழு சில சமயம் அந்த இடத்தில உள்ள பொருளுக்காக ஏற்று கொள்ளப்பட்டால் வழுவமைதி சா: 'அம்மையே! அப்பா, ஒப்பிலா மணியே!!' - இங்க தாய் போல இரக்கம் உள்ளதால சிவன் 'அம்மையே'ன்னு சொல்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

28. அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவின்னா என்னென்ன?

விரைவு, வெகுளி,அச்சம், உவகை - இத சொல்ல ஒரே சொல் அடுக்கடுக்கா வந்தா அடுக்குத்தொடர் சா: ஓடு ஓடு ஓடு. மேலும், இத பிரிச்சா சொல்லுக்கு பொருள் இருக்கும்.

இரண்டு இரண்டா ஒலிக்குறிப்புச் சொற்களா வந்து, சொற்கள பிரிச்சா பொருளில்லாம வந்தா இரட்டைக்கிளவி சா: கல கல

29. மரபுன்னு ஒண்ணு இருக்கு தெரியுமா - எப்பொருளை எச்சொல்லால் நம் முன்னோர்கள் வழங்கினார்களோ அப்படியே சொல்வது மரபு சா: யானைப்பாகன், கீரிபிள்ளை, பசுங்கன்று

30. புணர்ச்சி - அப்படின்னா? அதன் வகைகள் என்னென்ன?

நிலைமொழி ஈறும் வருமொழியும் சேருவது புணர்ச்சி. சொல் வகையா இது 2 வகை.

நிலைமொழி ஈறும் வருமொழியும் சேரும் போது இயல்பா வந்தா இயல்பு புணர்ச்சி சா: மலை+நாடு= மலைநாடு.
ஏதாவது மாற்றம் வந்தால் அது விகாரப் புணர்ச்சி. இதுல எழுத்துக்கள் தோன்றலாம், திரியலாம், மறஞ்சும் போகலாம் சா : வெற்றிலை+ கடை-வெற்றிலைக்கடை

இது தவிர வாக்கியம் அமைப்பதில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எப்படி வரணும்ன்னு நிறைய விதிகள் இருக்கு..நீங்க மேல உள்ள தளத்துக்கு சென்று படிச்சு பாருங்க. நம்ம இதோட பொருளிலக்கணத்த முடிச்சுக்குவோம்!

தெரிந்தால் சொல்லுங்களேன் -6

1. அமெரிக்காவில் நிறைய தமிழ் சங்கங்கள்/மன்றங்கள் இருக்கு. அவை என்னென்ன எங்கெங்கன்னு ஒரு பட்டியல் கிடைக்குமா?

2. அதுல, மேடைநாடகம் நடத்தும் சங்கங்கள் எந்த ஊர்களுல இருக்குன்னு சொல்லமுடியுமா?? நமக்கு கொஞ்சம் நாடகத்துல நடிக்க ஆசை.. ஹீ ஹீ..சான்ஸு தேடத் தான் கேக்கறேன்!!

3 comments:

ஜீவி said...

நட்சத்திர வாரத்தை நன்கு பலருக்கு பயன்படுகிற்மாதிரி உபயோகப்படுத்திக் கொண்டமையை மறக்கமுடியாது.
தமிழ் இலக்கண அறிமுகங்கள் புது முயற்சி.
வாழ்த்துக்கள்.

Maayaa said...

மிக்க நன்றி ஜீவி அவர்களே!!

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்? உங்க பக்கத்துலேயே ஹூஸ்டனில் பாரதி கலை மன்றம் இருக்கே, கிட்டத் தட்ட 25 வருஷத்துக்கும் மேலே ஆச்சு, அது ஆரம்பிச்சு, இப்போப் பொங்கலுக்குக் கூட பெரிய அளவில் விழா எடுத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பாங்க. நான் ஹூஸ்டனில் இருக்கும்போது, செப்டெம்பரில் விநாயக சதுர்த்தி சமயம், பாரதி நினைவுநாள் விழாவுக்கு சுகிசிவம் அவர்கள் வந்திருந்தார். ஒரு நாள் தான் எங்களால் போக முடிந்தது! :(