Wednesday, November 30, 2005

திருவாசகம்..பூ ஏறு கோனும்...நாயேனைத்

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச
சீயேனும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

தெளிவுரை
நாய் போன்ற பரிதாபத்துக்குரியவனான என்னை தன்னுடைய திருவடிகளைப் பாடும்படி செய்த இறைவனும்,பேய்த்தன்மை யுடையவனான என் மனக்குற்றங்களை மன்னிக்கும் பெருமையுடையவனும்,சிறிதளவும் இல்லாத யான் செய்யும் தொண்டுகளை ஏற்றருள்கின்ற தாயானவனுமாகிய இறைவனிடமே போய் ஊதுவாயாக அரச வண்டே!

பதவுரை
நாயேனை - நாய் போன்ற பரிதாபத்துக்குரியவனான என்னை
தன் அடிகள் -( pope says 'jewelled feet' but i cant make out how it means so. if u know let me know) தன்னுடைய திருவடிகளைப்
பாடுவித்த - பாடும்படி செய்த
நாயகனை - இறைவனும்
பேயேனத் - பேய்த்தன்மை யுடையவனான ( கெட்டவைகள்) என்
உள்ளப் பிழை பொறுக்கும் - மனக்குற்றங்களை மன்னிக்கும்
பெருமையனை - பெருமையுடையவனும்
சீ ஏதும் இல்லாது - சிறிதளவும் இல்லாத
என் செய் பணிகள் கொண்டருளும் - யான் செய்யும் தொண்டுகளை ஏற்றருள்கின்ற
தாயான ஈசற்கே - தாயானவனுமாகிய இறைவனிடமே
சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக
கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை
இறைவன் அடியார்களைத் தன்னைப் பாடும் பணியிலே நிற்கச்செய்து அருள் புரிகின்றான் என்பது ‘நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகன்’ என்பதனால் விளங்குகிறது. தாயானவள் சேயினது குற்றத்தைப் பொறுத்துப் பரிவும் காட்டுவாளாதலின், இறைவனை ‘தாயான ஈசன்’ என்றார். இதனால், பாடும் பணி இறைவனுக்கு மிகவும் உவகையைத் தருவது என்பதை அறியலாம்.

Wednesday, November 23, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்.. நானும்

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

தெளிவுரை:
தானும் தன் தேவியான தையல்நாயகியுடன் நீண்ட சடையையுடைய சிவபெருமான் எம்மை ஆட்கொள்ளவில்லையாயின் நானும் எனது உள்ளமும் தலைவனாகிய அவனுக்கு எவ்வளவு தூரத்தில் இருப்போம். ஆகாயமும் திக்குகளும் பெரிய கடல்களும் ஆகிய பெருமானது தேன் ஊரும் திருவடிகளிடத்தே போய் ஊதுவாய், அரச வண்டே!

பதவுரை:

நானும் - யானும்

என் சிந்தையும் - எனது உள்ளமும்

நாயகனுக்கு - தலைவனாகிய அவனுக்கு

எவ்விடத்தோம் - எந்த இடத்தில் இருப்போம் ( எவ்வளவு தூரத்தில்
இருப்போம் )

தானும் தன் தையலும் - தானும் தன் தேவியான தையல்நாயகி

தாழ்சடையோன் - நீண்ட சடையையுடைய சிவபெருமான்

ஆண்டிலனேல் - ஆட்கொள்ளவில்லையாயின்

வானும் - ஆகாயமும்

திசைகளும் - திக்குகளும்

மாகடலும் - பெரிய கடல்களும்

ஆயபிரான் - ஆகிய பெருமானது

தேன் உந்து - தேனைச் சொரிகின்ற

சேவடிக்கே - திருவடிகளிடத்தே

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை :

இறைவனே தம்மை ஆட்கொள்ளவில்லையென்றால் தாமும் தம் சிந்தையும் எங்கேயோ இருந்திருக்கும் என்று கூறுகிறார். தையலும் என்பது தையல்நாயகி - வைதீஸ்வரன் கோவில் அம்பாளைக் குறிக்கின்றது.

Saturday, November 19, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்.. வைத்தநிதி

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்விஎன்னும
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ
சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:

ஈட்டி வைத்த செல்வம், மனைவியர் ,புதல்வர், குலம், கல்வி ஆகிய இவையே வாழ்க்கையென்று நம்புகின்ற மாயையில் உள்ள இவ்வுலகத்தில், பிறப்பு இறப்பு என்கின்ற மனோவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தை போக்கிய செறிந்த ஞானமுள்ள பரம்பொருளிடம் போய் ஊதுவாய் அரச வண்டே!

பதவுரை:

வைத்த நிதி - ஈட்டி வைத்த செல்வம்

பெண்டிர் - மனைவியர்

மக்கள் - புதல்வர்

குலம் - குலம்

கல்வி - கல்வி

என்னும் - ஆகிய இவையே வாழ்க்கையென்று நம்புகின்ற

பித்த உலகில் - மாயையில் உள்ள இவ்வுலகத்தில்

பிறப்பொடு இறப்பு என்னும் - பிறப்பு இறப்பு என்கின்ற

சித்த விகாரக் கலக்கம் - மனோவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தை (Mentally changing state)

தெளிவித்த - போக்கிய

வித்தகத் தேவற்கே - செறிந்த ஞானமுள்ள (wisdom) பரம்பொருள் (mighty Lord)

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை:

நிலையில்லாத பொருள்களாகிய நிதி முதலியவற்றை நிலையுடையது என்று எண்ணும் அறிவு பேதைமையாதலால், இவ்வுலகை ‘பித்த உலகு’ என்றார்.

இறைவன் இவ்வறியாமையைப் போக்கி அறிவை வழங்குவாராதலால் ‘சித்த விகாரம் தெளிவித்த வித்தகத் தேவர்’ என்றார்.

வித்தகத்தேவர் என்ற வார்த்தைப் ப்ரயோகம் மிக அருமையாக இறைவனின் சிறப்பை விளக்குகிறது!!

தொடரும்..

Wednesday, November 09, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்..கண்ணப்பன்

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருள
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு என்னிடத்தில் இல்லாமை அறிந்தும் என் தந்தையான ஈசன் எதனோடும் ஒப்பில்லாத என்னையும் அடிமையாகக் கொண்டருளி இவ்வண்ண்ம் செய் என்று (நான் செய்ய வேண்டியதைத்) தெரிவித்து என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய மேலாகிய கருணையையுடைய பொடியாக / மின்னுகின்ற அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே போய் ஊதுவாயாக! அரச வண்டே!

பதவுரை :

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு - கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு

இன்மை கண்டபின் - என்னிடத்தில் இல்லாமை அறிந்தும்

என் அப்பன் - என் தந்தையான ஈசன்

என் ஒப்பில் - எதனோடும் ஒப்பில்லாத

என்னையும் ஆட்கொண்டருளி - என்னையும் அடிமையாகக் கொண்டருளி

வண்ணம் பணித்து - இவ்வண்ண்ம் செய் என்று (நான் செய்ய வேண்டியதைத்) தெரிவித்து

என்னை வாவென்ற - என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய

வான் கருணை - மேலாகிய கருணையையுடைய

சுண்ணம் - பொடியாக / மின்னுகின்ற

பொன் நீற்றற்கே - அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக!

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை :

Thanks to wiki books!!

கண்ணப்பர் அன்பு காட்டியது :
தொண்டை நன்னாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் வேடர் குலத்தில் தோன்றியவர் கண்ணப்பர். இவரது இயற்பெயர் திண்ணனார். பருவம் வந்ததும் வேட்டையாடும்பொருட்டுச் சென்றவர் காளத்தி மலை அடிவாரத்தை அடைந்தார்; துணைவன் நாணானால் குடுமித் தேவர் அம்மலைமீதுள்ளார் என உணர்ந்தார்.
முன்னைத் தவப்பயனால் மலைமீதேறிப் பெருமானைக் கண்டார்; அன்பு கொண்டார்; இலிங்கத்தின்மேல் பூவும் பச்சிலையும் இருக்கக் கண்டு, அவற்றை அந்தணர் ஒருவர் சார்த்தி வழிபட்ட முறையை நாணன் கூறக் கேட்டார். பின்பு வாயாகிய கலசத்தில் நீரை முகந்துகொண்டும், பூவும் பச்சிலையும் பறித்துத் தலையில் வைத்துக்கொண்டும், வேட்டையாடிய இறைச்சியாகிய உணவைத் தேடிக் கொண்டுவந்தும், இலிங்கத்தின்மீதிருந்த பூ முதலியவற்றைத் தம் செருப்புக்காலால் நீக்கி, தாம் கொணர்ந்த நீரை உமிழ்ந்து பூவையும் இலையையும் சொரிந்து, ஊனமுதை இட்டு வழிபட்டார்; இங்ஙனம் ஐந்து நாள்கள் வழிபாடாற்றினார். இதைக் கண்டு மனம் பொறாது வருந்திய சிவகோசரியாருக்குத் திண்ணனாரின் அன்பைப் புலப்படுத்த எண்ணிய இறைவன், ஆறாம் நாள் தன் கண்ணில் உதிரம் சொரியச் செய்தான். இதைக் கண்ட திண்ணனார் துடிதுடித்துத் தம் கண்ணையே இடந்து அப்பினார். இறைவனது மற்றொரு கண்ணிலும் உதிரம் வரக் கண்டு தமது மற்றொரு கண்ணையும் அம்பினால் தோண்டும் போது இறைவன், ‘நில்லு கண்ணப்ப’ எனத் தடுத்து நாயனாரின் அன்பை வெளிப்படுத்தினான்.

Friday, November 04, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்..தினைத்தனை

தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும
அனைத்தெலும்பும் உள்நெக ஆனந்தத் தேன்சொரியுங
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
தினையளவாய் இருக்கின்ற மலரிலுள்ள தேனைப் பருகாமல், நினைக்குந்தோறும், காணுந்தொறும், சொல்லுந்தொறும் எக் காலத்தும், எல்லா எலும்புகளும் உள்ளே நெகிழும்படி பேரின்பத் தேனைப் பொழியும் கூத்துடைய பெருமானிடத்திலேயே போய் ஊதுவாயாக அரச வண்டே!

பதவுரை:
தினைத்தனை உள்ளது - தினையளவாய் (Denoting small seed/ also called as italian millet) இருக்கின்ற

ஓர் பூவினில் தேன் உண்ணாது - மலரிலுள்ள தேனைப் பருகாமல்,

நினைத்தொறும் - நினைக்குந்தோறும்

காண்தொறும் - காணுந்தொறும்

பேசுந்தொறும் - சொல்லுந்தொறும்

எப்போதும் - எக் காலத்தும்

அனைத்து எலும்பும் - எல்லா எலும்புகளும்

உள்நெக - உள்ளே நெகிழும்படி

ஆனந்தத் தேன் சொரியும் - பேரின்பத் தேனைப் பொழியும்

குனிப்புடையானுக்கே - கூத்துடைய பெருமானிடத்திலேயே (wiki book says so)

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை: பூவிலுள்ள தேனைத் ‘தினையளவு’ என்றும், இறைவனது கூத்தினை, ‘தேன்மழை’ என்றும் அதனால் வண்டே ! அங்கே சென்று ஊதுவாயாக என்று கூறுவதால் ‘இறையின்பம் அளவற்றது’ என்பதை நமக்கு எடுத்துக் கூறுகிறார்.

'நினைக்குந்தோறும், காணுந்தொறும், சொல்லுந்தொறும் எக் காலத்தும் எல்லா எலும்புகளும் உள்ளே நெகிழும்படி பேரின்பத் தேனைப் பொழியும்' என்று கூறி நமது உள்ளத்தை நெகிழ வைக்கிறார் மாணிக்கவாசகர்.