Friday, July 10, 2009
வடவரையை மத்தாக்கி - 4
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;
பதவுரை:
மூவுலகும் - மூன்று உலகும்
ஈரடியான் - இரண்டு அடிகளால்
முறை - முறைப்பட்டு
நிரம்பா - நிரம்பாத (தை)
வகைமுடியத் - முற்றும்(முடிக்கும்)வண்ணம்
தாவிய - தாவிய
சேவடி - சிவந்த திருவடி
சேப்பத்- சிவக்கும் வண்ணம்
தம்பியொடுங்- தம்பியோடு (இலக்குவனோடு)
கான்போந்து -கானகம் புகுந்து
சோவரணும் - சோ என்ற அரணும் (அதில் வாழும் மக்களும்)
போர்மடியத் - போரில் இறக்க
தொல்லிலங்கை - தொன்மையான இலங்கையின்
கட்டு அழித்த - கட்டுக்காவலையும் அழித்த
சேவகன் - வீரன்
சீர் கேளாத - புகழ் கேளாத
செவி என்ன செவியே - காது என்ன காதுகள்?!!
திருமால் சீர் கேளாத - அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத
செவி என்ன செவியே - காது என்ன காதுகள்?!!
பொருளுரை:
மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும் வண்ணம்
தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும் வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும் மக்களும்,போரில் இறக்கும் படி செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும் அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்?!!அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத காது என்ன காதுகள்?!!
தொடரும்..
Wednesday, July 08, 2009
வடவரையை மத்தாக்கி - 3
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே;
பதவுரை:
திரண்டு அமரர் - தேவர்கள் கூடி
தொழுது ஏத்தும் - வணங்கி போற்றும்
திருமால் - திருமால்
நின் செங்கமல - தங்களின் செம்மையான தாமரை மலர்
இரண்டடியான் - இரண்டு அடிகளால்
மூவுலகும் - மூன்று உலகும்
இருள்தீர நடந்தனையே - இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே
நடந்தஅடி - (அப்படி) நடந்த அடி
பஞ்சவர்க்குத் - பஞ்ச பாண்டவர்களுக்கு
தூதாக - (குருவம்ச/அஸ்தினாபுர சபைக்கு)தூதாக
நடந்தஅடி - நடந்து சென்ற அடிகளாம்
மடங்கலாய் - (நர)சிம்மமாய் வந்து
மாறு - பகை
அட்டாய் - அழித்தாய்
மாயமோ - இதென்ன மாயமோ
மருட்கைத்தே - வியப்பு உடையதாய் உள்ளதே!
பொருளுரை:
தேவர்கள் கூடி வணங்கி போற்றும் திருமாலே தங்களின் செம்மையான தாமரை மலர்
இரண்டு அடிகளால் மூன்று உலகும் இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே. அப்படி நடந்த அடி
பஞ்ச பாண்டவர்களுக்காக அஸ்தினாபுர சபைக்கு தூதாக நடந்து சென்ற அடிகளாம்.(நர)சிம்மமாய் வந்து பகை அழித்தாய். இதென்ன மாயமோ!! வியப்பு உடையதாய் உள்ளதே!
தொடரும்..
Monday, July 06, 2009
வடவரையை -2
அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே;
பதப்பொருள்:
அறு பொருள்- தீர்ந்த பொருள். அறுதியிடப்பட்ட பொருள். ஐய்யமற்ற பொருள்.
ஐவகை சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருள் என்றும் கொள்ளலாமாம்.
இவனென்றே- இவன் என்றே
அமரர் கணந்- தேவர் கூட்டம்
தொழுது ஏத்த- வணங்கி புகழ்ந்து பாட/சொல்ல
உறுபசி- நிறைந்த பசி
ஒன்று இன்றியே- ஒன்று இல்லாமலேயே
உலகு அடைய- உலகம் முழுவதையும்
உண்டனையே- உண்டாயே
உண்டவாய்- (அப்படி) உண்ட வாய்
களவினான்- களவி(திருட்டி)னால்
உறிவெண்ணெ- உறியினில் உள்ள வெண்ணை(தனை)
உண்டவாய்- உண்ட வாய்!!!
வண் துழாய்- வண்மையான துளசி
மாலையாய் - மாலையை உடையவனே
மாயமோ - இதன்ன மாயமோ
மருட்கை த்தே - வியப்பு உடையதாயுள்ளதே!
பொருளுரை
தீர்ந்த பொருள் இவன் என்றே தேவர் கூட்டம் வணங்கி புகழ
நிறைந்த பசி ஒன்று இல்லாமலேயே உலகம் முழுவதையும் உண்டாயே!! அப்படி உண்டவாய் களவினால் உறியினில் உள்ள வெண்ணைதனை உண்டவாய்!!!வண்மையான துளசி மாலையை அணிந்தவனே!! இதன்ன மாயமோ !! வியப்பு உடையதாயுள்ளதே!
தொடரும்..
Thursday, July 02, 2009
வடவரையை -1
17. ஆய்ச்சியர் குரவை - முன்னிலைப் பரவல்
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே;
பதவுரை:
வடவரையை - வடப்பகுதியில் உள்ள மேருமலையை
மத்து ஆக்கி - மத்தாகக் கொண்டு
வாசுகியை- வாசுகி என்ற பாம்பை
நாண்(கயிறு) ஆக்கி - கயிறாகக் கொண்டு
கடல்வண்ணன் - கடல் போன்ற (நீலநிற) வண்ணம் கொண்டவன்
பண்டு ஒரு நாள் -பண்டைக் காலத்தில் ஒரு நாள்
கடல்வயிறு- ஆழ்கடலின் நடுப் (உட்)பகுதியினை
கலக்கினையே- கலக்கினாயே (கடைந்தாயே)
கலக்கிய கை- அப்படி கலக்கியவனுடைய கை(களோ)
அசோதையார்- யசோதை தாயார்
கடை கயிற்றாற் - மோர் கடைகின்ற கயிற்றால்
கட்டுண்(ட) கை- கட்டுண்ட கைகளாம்
மலர்க்கமல- தாமரை மலர் (தாங்கிய)
உந்தி(தொப்புள்) யாய் - தொப்பிள் கொண்டவனே
மாயமோ- இதென்ன மாயம் தானோ !!
மருட்கை(வியப்பு) த்தே - வியக்க வைப்பதே !!
பொருளுரை:
வடப்பகுதியில் உள்ள மேருமலையை மத்தாகக் கொண்டு வாசுகி என்ற பாமபினை கயிறாகக் கொண்டு, கடல் போன்ற நீலநிறம் கொண்ட(வனே) பண்டைக் காலத்தில் ஒரு நாள் ஆழ்கடல் நடு (உட்)பகுதியினை கலக்கினாயே! அப்படி கலக்கிய கைகள் யசோதை தாயார் மோர் கடைகின்ற கயிற்றால் கட்டுண்ட கைகளாம்!! தாமரை மலர் தனை தொப்புளில் கொண்டவனே!! இதென்ன மாயம் தானோ.. வியக்க வைப்பதே !!
Wednesday, July 01, 2009
வடவரையை மத்தாக்கி..பதம் பொருள் விளக்கம்
நம்மில் பலரும் "வடவரையை மத்தாக்கி.." எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாள் பாடிக் கேட்டு அகம் மகிழ்ந்திருப்போம். இன்று வழக்கம் போல் நானும் அந்தப் பாடலைக் கேட்கையில் கவிதையின் அழகு இசையின் இனிமையையும் விஞ்சி நின்றது. பாடலில் பொருளை கவனிக்க, என்னையும் அறியாமல் அப்படி ஒரு ஈர்ப்பு என்னுள் வந்தது. அதன் காரணமாக ஒவ்வொரு பதத்தின் அழகையும் கவனிக்க விழைந்தேன்..ஆனால் ஆங்காங்கே சில இடங்களில் எனக்குப் பொருள் விளங்கவில்லை. இணையத்தளத்தில் பொருள் தேட விழைந்தேன். எத்தனையோ தளங்களில் பொருள் விளக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை படிக்க துவங்கையதில் துக்கம் என் தொண்டையை அடைத்தது. இவ்வளவு அழகான பாடலில் எனக்குத் தெரிந்த இடங்களிலேயே தவறான விளக்கங்கள். அந்தோ பரிதாபம்!! தெரியாதவற்றிற்கு பொருள் கொள்ள முடியாமல் தவித்தேன். பொருளுக்குத் தான் இந்த அவல நிலையென்றால் சொற்களே பல தளங்களில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில பாடகர்களும் சில இடங்களில் சொற்களை வதைக்கிறார்கள். பல இடங்களில் தேடிய பிறகு,Tamil Virtual University போன்ற இடங்களில் சரியான பொருள் கண்டேன்..இருப்பினும் எல்லா வரிகளையும், அனைவரும் பார்க்கும் வசதி (public access) இல்லை. மேலும், பதவுரை எங்கும் இல்லை. விளக்கம் அறியா பதங்களை குறித்துக் கொண்டு அகராதியில் பொருள் தேடி, அதனை நம்பகமான தளங்களில் உள்ள பொருளுரையுடன் ஒப்பிட்டு வைத்துள்ளேன். இங்கு நாளை முதல் பதிவு செய்ய உள்ளேன். அனைவரும் பதப்பொருள் அறிந்து இப்பாடலைக் கேட்டால், அதன் சுவையே தனி..எனக்கு இதைக் கேட்கும் போது அவ்வப்போது திருவாசகத்தின் "புற்றில் வாழ் அரவம்.." பாடல் நினைவுக்கு வருகிறது !! இன்று இங்கு பாடலைக் கேளுங்கள்.
Sunday, February 10, 2008
திருப்பாவை(Thiruppaavai)-9,10
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோமா
மாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
பொருள்:
அழகான குறையற்ற மாணிக்கங்கள் அலங்கரிக்கும் மாடத்தில் சுற்றிலும் விளக்கெரிய, நறுமணத்துடன் எங்கும் தூபம் கமழ அழகிய மெத்தையில் உறங்கும் மாமன் மகளே உன் மணிக்கதவின் தாளை திறவாய்! மாமியே அவளை எழுப்புங்கள், நாம் சொல்வதை கேட்காமல் உறங்கும் உன் மகள் ஊமையோ?செவிடோ? களைப்போ அல்லது தன்னை மறந்து உறங்கும் வண்ணம் மந்திரவாதம் செய்யப்பட்டாளோ? அவள் உறக்கம் கலைத்து அந்த மாயனின், மாதவனின், வைகுந்த நாதனின் நாமங்களை சொல்லி அவன் அருளை வேண்டுவோம்.
thoomaNi maadaththuc cuRRum viLakkeriyath *
thoopam kamazhath thuyilaNaimEl kaN vaLarum *
maamaan magaLE! maNik kadhavam thaaL thiRavaay *
maameer! avaLai ezhuppeerO * un magaL thaan
oomaiyO? anRic cevidO? anandhalO? *
Emap perunthuyil mandhirap pattaaLO? *
maamaayan maadhavan vaikundhan enRenRu *
naamam palavum navinRElOr embaavaay.
Word for Word meaning
thoo maNi -wonderfully ornamented
maadaththu -hall
cuRRum viLakku eriya -with lamps burning all around
thoopam (thoomam) -incense
kamazha -wafting
thuyil aNai mEl -on your sleeping bed
kaN vaLarum -asleep (lit. your eyes asleep)
maamaan magaLE -O daughter of our uncle!
maNi -jewelled
kadhavam -door's
thaaL -latches
thiRavaay -open!
maameer -Dear Aunty!
avaLai ezhuppeerO -please wake her up
un magaL thaan -your daughter, indeed
oomaiyO? -has she been struck dumb (speechless)?
anRi -or,
cevidO? -is she deaf?
anandhalO? -is she exhausted (and therefore unable to get up)?
Ema -curse
perun^ thuyil -long sleep
mandira -spell (Sanskrit: mantra)
pattaaLO? -has she been placed under
maa -great
maayan -magician (Maayan is a Tamil word for Vishnu)
maadhavan -a name of Vishnu meaning consort of Lakshmi
(maa = Lakshmi)
vaikundhan -Lord of Vaikuntha, the supreme place
where the liberated live
enRu -enRu saying
naamam palavum -many names
navinRu -we recite (to ward off her spell of sleep
and wake her up)
திருப்பாவை பாடல் - 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமுந் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
பொருள்:பாவை நோன்பிருந்து சுவர்க்கம் அடைய உன்னை எழுப்பினால் வாசல் கதவை திறக்காதவளே நீ பேசவும் மாட்டாயோ? மணங்கமழும்(நாற்றம்) துளசி(துழாய்) மாலையை அணிந்திருக்கும் நாராயணின் புகழை நாம் போற்றினால் அவன் நமக்கு வேண்டியன தருவான். அன்றொரு(பண்டொரு) நாள் எமனின்(கூற்றத்தின்) வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், உன்னிடம் உறங்கும் போட்டியில் தோற்று பெரும் உறக்கத்தை உனக்கு தந்தானோ? என்று சொல்லும் படி உறங்குபவளே, எங்களுக்கு அணியாய் இருப்பவளே தடுமாறாமல் தெளிவாய் வந்து கதவை திறப்பாயாக.
nORRuc cuvarkkam puguginRa ammanaay! *
maaRRamum thaaraarO vaasal thiRavaadhaar *
naaRRath thuzhaay mudi naaraayaNan * nammaal
pORRap paRai tharum puNNiyanaal * pandu oru naaL
kooRRaththin vaay veezhndha kumbakarNanum *
thORRum unakkE perunthuyil thaan thandhaanO *
aaRRa anandhal udaiyaay! arungalamE *
thERRamaay vandhu thiRavElOr embaavaay.
Word for Word meaning
nORRu -performing (the paavai) vow
cuvarkkam -heaven (Sanskrit: svarga)
puguginra -entering
ammanaay! -O dear girl!
maaRRamum -Even a reply
thaaraarO? -shouldn't give?
vaasal -doors
thiRavaadhaar -those who don't open
naaRRa -fragrant
thuzhaay -Tulasi
mudi (bearing on his)- head
naaraayaNan -Narayana
nammaal -by us
pORRa -praised
paRai tharum -gives the drum
puNNiyanaal -by He who is virtue itself
paNdu oru naaL -One day, long ago
kooRRaththin -into Death's
vaay -mouth
veezhndha -fell
kumbakarNanum -Kumbhakarna
thORRum -having been defeated
unakkE -just to you
perun^ thuyil -deep sleep
thaan -indeed
thandhaanO? -has he given it?
aaRRa -utterly
anandhal udaiyaay! -one who is overcome with sleep
arum kalamE! -you who are the jewel among us!
thERRamaay -having understood
vandhu -come
thiRa -open
தொடரும்..
Saturday, February 02, 2008
Saturday, January 12, 2008
நன்றி! மீண்டும் வருக!!
இந்த வலைத்தளப் பதிவுகளை தினம் வந்து படித்து என்னை ஊக்குவித்ததற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இது எனக்கு ஒரு நல்ல அனுபவம். மனதில் இருந்த சில கதைகள சந்தோஷமாகச் சொன்னேன். இலக்கணத்தை, ஒரு பெரிய தமிழ் கூட்டத்தில் பேசணும்ன்னு எனக்குள்ள இருந்த தவிப்பு ஒரளவுக்குத் தணிந்தது. மேலும் எனக்குள்ளிருந்த கேள்விகளையும் கேட்டாச்சு. பதில எப்பொழுது தெரிந்தாலும் சொல்ல வேண்டுகிறேன். எல்லாவற்றுக்கும் மேல, இங்க பல நண்பர்கள் கிடைத்துள்ளனர். நிச்சயம் உங்கள் வலைத்தளங்களுக்கு வந்து நல்லவற்றைக் கற்று, நம் நட்பை வளர்க்க முயல்வேன். இன்னும் நம்ம நிறைய பேசுவோம்..
மேலும், இங்கு திருப்பாவையைத் தொடர உள்ளேன். அதன் பிறகு, தினம் ஒரு பதிவு இடாவிட்டாலும், அப்பபோ பதிவு செய்யறேன்...வாங்க!! திருப்பாவை வேண்டாமா!! குட்டிப்பிரியா வுக்கு வாங்க..வெட்டிக் கதை பேசலாம். அதுவும் வேண்டாமா. ஆன்மீகப் பகுதிக்கு வாங்க!! அங்க பார்க்கலாம்.
வரப்போகும் 'தை' மாதம் உங்களுக்கு எல்லா நன்மையையும் தரட்டும்!!
வாய்ப்பளித்தமைக்கு நன்றி!!
நன்றி! மீண்டும் வருக!!
அன்புடன்,
ப்ரியா (எ) செண்பக லட்சுமி
நட்பும் நிறைவும், யாப்பும் அணியும் மற்றும் மின் அகராதி !!
நட்சத்திர வாரத்தின் கடைசி நாள்!! இவ்வளவு தமிழ் ஆர்வம் உள்ள மக்கள இங்க சந்திப்பேன்னு நான் எதிர்ப்பார்க்கல..இந்த வாரம், மனசுல ஒரு தனி நிறைவு தான் போங்க!! நிறைவுன்னா எனக்கு நினைவுக்கு வருபவர் பிசிராந்தையார் தான்.
சும்மா கதை ஒண்ணு கேளுங்க!!
பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் மானசீக தோழர்கள். ஒருத்தர பற்றி இன்னொருத்தர் கேள்விப்பட்டு ஒரு நட்பை மனசுல வளத்துகிட்டவங்க. ஒருத்தரோட பேர இன்னொருத்தரும் சேர்த்து எழுதும் அளவுக்கு அன்பு வளர்ந்தது.. உறையூரில் உள்ள கோப்பெருஞ்சோழனுக்கும் அவன் மகன்களுக்கும் சண்டை வந்ததால, சான்றோர்களின் அறிவுரையின் பேரால், நாட்டை அவர்களுக்கு விட்டுக் கொடுத்துட்டு உண்ணா நோன்பு இருந்து உயிர்விட எண்ணினான் சோழன். ஆனால், மானசீகமா, அதற்குள்ள பிசிராந்தையார் தன்னைப் பார்க்க வருவார்ன்னு நம்பினான்.
ஏதோ உள்ளுணர்வால, பிசிராந்தையாரும் உறையூருக்கு சோழன பார்க்க நடந்தார். 'தலை நரைக்கும் வயதாகியும் உங்களுக்கு நரைக்க வில்லையே'ன்னு உறையூர் மக்கள் கேட்டதற்கு (புறநானூறுல இருக்கு) அவர் சொன்ன பதில் இது.
"ஆண்டு பலவாகியும் என்னிடம் நரையில்லையே எனறு கேட்டால், அதற்குக் காரணம், முதலில், என் மனைவி மிக மாண்பு/சிறப்பு மற்றும் பொறுமை நிறைந்தவளாக இருக்கிறாள். அத்துடன் பிள்ளைகளும் அப்படியே அமைந்துள்ளனர். என் சேவகர்களோ எனக்கு என்ன வேண்டும் என்றறிந்து உதவி செய்பவர்கள். மன்னனோ மக்கள் மீது அன்புடையவன். அவனால் வழி நடத்தப்படும் பொறுப்பு மிக்கவர்களாய் இளைஞர்கள் உள்ளார்கள். இத்தகைய மனிதர்களுக்கிடையில் வாழும் வாய்ப்பைப் பெற்றதால் எனக்கு வயது கூடிய பிறகும் தலை நரைக்கவில்லை" என்றார் பிசிராந்தையார். இதோட பாட்டு
"யாண்டு பலவாக நரையிலவாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்
மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்
பலர்யான் வாழும் ஊரே"
மேலும் அவர் கோப்பெருஞ்சோழன் இருந்த இடத்தை அடைந்ததும், அவன் வடக்கு நோக்கி உயிர் நீத்தான் என்று கேள்விப்பட்டார். அதனால் தானும் வடக்கு நோக்கி விரதம் இருந்து உயிர் நீத்தாராம். அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!!! வழக்கம் போல எங்க வீட்டு பெரியவங்க இந்த பாட்ட சொல்லி ' நீங்க எல்லாம் இப்படி சொல்லும்படியாவா நடக்கறீங்க. எங்க தலை நரைப்பதே உங்களால தான்' ன்னு திட்டுவாங்க..ஹீ ஹீ
இந்தக்கதையில, நரையில்லாம இருப்பது எப்படி?, தன்னை விட சிறந்த மனைவி கிடைச்சா அத ஒத்துக்க மனம் வருமா?, உள்ளுணர்வு சக்தி என்றொண்டு உண்டு!! மற்றும் நட்புக்கு இலக்கணம் இவர்கள் -இப்படியெல்லாம் கருத்துக்கள் எடுத்துக்கலாம்.ஆனால், அவர் பதிலுல உள்ள 'அந்த நிறைவு/பெருமை' எனக்கு ரொம்ப பிடிச்சதுங்க.. நீ எப்படி இருக்கன்னு கேட்டா, அப்ப எந்த பெரிய தொல்லை இல்லையென்றாலும், இந்த காலத்துல யாராவது ' நல்லா இருக்கேன்'/சௌக்கியம்'- இப்படியெல்லாம் சொல்லறாங்களா.!! ஏதோ இருக்கேன் - இதுதான் அதிகபட்ச நிறைவா இருக்கு..யாருக்குத் தான் ப்ரச்சனை இல்ல..ஆனா, அப்பப்போவாவது, அந்த நிறைவு மனசுக்கு வர நாம எல்லாம் பழகிக் கொள்ளணுங்க..
சரி, இலக்கணத்துக்குப் போவோமா!
இலக்கணம் ஒரு கண்ணோட்டம் - 7
31. யாப்பு இலக்கணம்: யாப்பு என்பது பாட்டு. பாட்டுக்குறிய இலக்கணம் யாப்பிலக்கணம். யாப்பு என்றால் கட்டுதல்ன்னு பொருள். யாக்கை-உடம்பு- கட்டுதல். அதாவது நம்ம உடம்பு ரத்தம், தோல், எலும்பு, நரம்பு போன்றவற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போல எழுத்து, அசை, சீர், தளை,அடி,தொடை என்பவையால தமிழ்ப் பாட்டு புலவர்களால் கட்டப்பட்டுள்ளது. இவைகளை வைத்து 4 பா வகையுள்ளது.1. வெண்பா 2.ஆசிரியப்பா 3. கலிப்பா 4. வஞ்சிப்பா
இதைப் பத்தி படிக்க நிறைய நேரம் தேவை. அதனால நம்ம சான்ற மட்டும் பார்ப்போம்.
1. வெண்பா: மூதுரை, நல்வழி, திருகுறள்,நாலடியார், நள்வெண்பா-இவையெல்லாம் வெண்பா வகை
2. ஆசிரியப்பா: சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
3. கலிப்பா: இது துள்ளல் ஓசையோடு வரும் சா: தக்கயாப்பரணி, பெரியபுராணம்.
4. வஞ்சிப்பா: பட்டினப்பாலை. வேறு சான்றுகள் கிடைத்தால் சொல்லுங்க!!
32. அணி இலக்கணம் பார்ப்போமா!!
செய்யுள் அழகாக அமைய, எழுத்தாலும் பொருளாலும் அழகு சேர்ப்பது அணி இலக்கணம். இதுல சிலவற்றைப் பார்ப்போம்
1. உவமை அணி: 'போன்ற' என்ற பொருளுள்ள உருபு மறையாம வருவது உவமை அணி.
சா: "அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று "
உவமேயம்: அன்பு இல்லாத வாழ்க்கை சிறக்காது
உவமானம்: பாலையிலுள்ள காய்ந்த மரம் தளிர்விடாது
அற்று(போன்ற) என்ற சொல் மறையாம வருது
2. எடுத்துக்காட்டு அணி: 'போன்ற' என்ற பொருளுள்ள உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு அணி.
சா: "தொட்டனைத் தூறும் மணற் கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"
உவமானம்: மணல் கிணறு தோண்டிய அளவு நீர் சுரக்கும்
உவமேயம்: மக்களுக்கு தான் கற்றதற்கேற்ப அறிவு வரும்
இங்கே போல என்பது மறைந்து வருது பாருங்க!!
3. வேற்றுமை அணி: ஏதோ ஒற்றுமை உள்ள ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி.
நம்ம டீ.ஆர் அடிக்கடி இத உபயோகபடுத்தறாரு பாருங்க:)-
சா: "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
புண் இங்க ஒற்றுமை. ஆனால் நாவினால் சொன்ன சுடுசொல்லோட புண் ஆறாது என்பது வேற்றுமை.
4. ஏகதேச உருவக அணி: ஒரு பொருளை உருவகப்படுத்தி அதனோடு தொடர்புடைய மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணியாகும்
சா: "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்".
இங்க, பிறவியை கடலாக உருவகப் படுத்தியிருக்கார். ஆனால், 'இறைவனடி சேராதவ'ர உருவகப் படுத்த வில்லையே!!
5. தற்குறிப்பேற்ற அணி: இயல்பா நடக்கும் ஒன்றை அழகா ஒரு குறிப்போடு இணைத்துச் சொல்வது தற்குறிப்பேற்ற அணி
சா:"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
6. வஞ்சப்புகழ்ச்சி அணி: புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்
சா: "புகழ்வது போல் இகழ்தல் தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான"
கயவர்கள் தம் மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருள். கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)
முற்றும். (மக்களே!! ஒரு வழியா இலக்கணம் முடிந்தது!! )
தெரிந்தால் சொல்லுங்களேன் - 7
உங்களுக்குத் தெரிந்த நல்ல தமிழ் மின்அகராதி இணையங்கள எனக்குச் சொல்லுங்களேன். நான் கண்ட ஒன்று இங்கே!!